Monday, 17 April 2017

கரட்டாம்பட்டி வீரக்கல்

பயணங்கள் முடிவதில்லை: கரட்டாம்பட்டி வீரக்கல்
கரட்டாம்பட்டி வீரக்கல்லை பார்க்கலாம் வாருங்கள் என்ற போஸ் ஐயாவின் அழைப்பை ஏற்று கரட்டாம்ட்டி பயணமானோம்.
திருச்சி – துறையூர் சாலையில் திருச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கரட்டாம்பட்டி என்னும் ஊரில் தனியார் ஒருவரது வயலில் வீரக் கல்தூண் ஒன்று காணப்படுகிறது. 92 X30X20 செ.மீ. அளவுகளுடைய இவ்வீரக்கல், கல்வெட்டு ஆய்வாளர் திரு சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
வலக்கையை மடித்தபடி இடக்கையில் வாளுடன் கூடிய வீரனின் புடைப்புச்சிற்பம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கல்தூணின் நான்கு புறங்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
“ மதிரை கொண்டான் என்ற மெய்கீர்த்தி பெற்ற முதலாம் பராந்தகச் சோழனின் 35 ஆம் ஆட்சியாண்டில் மியமாநாட்டு, வள்ளுவப்பாடி, விரியூர் என்ற ஊரைச்சார்ந்த பசு, ஆட்டுக் கூட்டங்களை ஊட்டத்தூர் நாட்டு பாடாலூர் என்ற ஊரைச் சேர்ந்த ஐஞ்சுருனிமான்கள் கொண்டு சென்றனர். அந்தப் பசுக் கூட்டங்களைப் பின்தொடர்ந்து சென்று அவற்றைத் திரும்பக் கொண்டு வருவதில் வெற்றிபெற்ற நாகன் என்னும் வீரன் அப்போது நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தான். நாகனின் மகளுக்கு விரியூர் மக்கள் ஏகமனதாக முடிவு செய்து வரி நீக்கப்பட்ட நிலத்தை கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் பதிவு செய்யப்ட்டுள்ளது”. என்கிறார் திரு சுபாஸ் சந்திர போஸ் அவர்கள்.
1. ஸ்வஸ்தீ ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பர்மருக்கி யாண்டு ஙயரு
2. ஆவது இவ்வாண்டு, மியமானாட்டு
3. வள்ளுவப்பாடி விரியூர், ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர்ரெஞ்சுருனிமான்கள் நிரை கொண்டுபோக,நிரைப்பின்பு சென்று, ஆடு ஈடு கொண்டுபட்ட கன் வீர
4. ன் மகளு(க்கு) ஓர்(ரோ)ரால், இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஊற்றத்தூர் தற்போதைய 'ஊட்டத்தூர்' எனவும் பாடாவூர் ஊட்டத்தூர் அருகிலுள்ள 'பாடாலூர்' எனவும் கொள்ளலாம்.
இவ்வீரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ள நாகன் இடக்கை பழக்கமுடையவனாகக் காட்டப்பட்டுள்ளதைக் கவனித்த நாமும் அங்கே இருந்த வயலுக்குச் சொந்தக்காரர்களிடம்
"உங்களிடம் யாருக்காவது இடக்கை பழக்கம் உள்ளதா" எனக்கேட்க, அங்கிருந்த இரு ஆண்களில் ஒருவர் கையைத் தூக்கினார்.
இதில் குறிப்பாக நிரைகொண்டு போக, நிரைபின் சென்று ஆடு ஈடு கொண்டு பட்ட – என்ற செய்தி தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் புறத்திணை இயலில் கூறப்பட்டுள்ள, வெட்சித்திணை – நிரைகொண்டு போக, கரந்தைத் திணை – நிரைபின் சென்று, ஆடு ஈடு கொண்டு பட்ட , என்னும் இருதிணைகள் வழங்குவதைக் காணலாம்.
தொல்காப்பியர் காலத்திலிருந்த திணை ஒழுக்கம் 950 ஆம் ஆண்டிலும் வழக்கில் இருந்ததை எண்ணி வியந்தவாறே வீடுவந்து சேர்ந்தோம்.
- பாலா பாரதி

No comments:

Post a Comment

அரிட்டாபட்டி

  மிக   அரிதாகக்   காணப்படும் ‘ இலகுலீசர்   சிற்பம் ’ உங்கள்   ஊருக்கருகே   உள்ளதே !  அதைப்   பார்க்கத்தான்   வருகிறோம்   என்று   திரு . சுக...