ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இந்நாளில் நாம், அவர் வாழ்வில் முக்கிய இடம்பெற்றுள்ள ஒரு ஊருக்குப் பயணம் செல்வோமா?
இம்முறை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்க்க கிளம்பிவிட்டோம். திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிச் சென்று அங்கிருந்து திருப்பத்தூர் வழியாக திருக்கோட்டியூர் செல்வதாகத் திட்டமிட்டமிட்டுள்ளோம்.
இராமானுஜர் நமது நாட்டின் புகழ்மிக்க பக்தி இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் சமயத்தையும் சமூகத்தையும் சீர்திருத்தம் செய்தவர்.
இதோ... திருக்கோட்டியூர் நெருங்கிவிட்டது...
தொலைவிலிருந்துப் பார்க்கும்போது உயரமான மதில் சுவர்களுடனும் தென்னைமரங்களுடனும் கோயில் அழகாகக் காட்சியளிக்கிறது. நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரத்தின் கம்பீரமாகக் காட்சியைப் பிரமிப்பாகப் பார்த்தவாறே உள்ளே செல்கிறோம்.
நூற்றுஎட்டு வைணவ திருக்கோயில்களில் ஒன்றான திருக்கோட்டியூர் கோயிலின் உள்ளே இருக்கிறோம். இங்குள்ள சௌமியநாராயணப் பெருமாள் சந்நிதிக்கு முதலில் செல்வோம். பெருமாளின் நின்ற, இருந்த, கிடந்த என முக்கோலங்களும் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். மூலவர் சௌமிய நாராயணன், தாயார் மகாலட்சுமி ஆவர்.
இக்கோயில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்புப் பெற்றது.
அங்குள்ளவர்களிடம் பேசும்போது, இவ்வூரின் பெயர்க்காரணமாகப் புராணக்கதையொன்றில், முக்கடவுளரும், தேவர்களும், ரிசிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் கொல்வது எப்படி என கண்டறிந்த இடம் என்கிறார்கள்.சிலர் வேறு காரணத்தையும் கூறுகிறார்கள், கோஷ்டி (கூட்டம்) சேர்ந்த இடமாக அமைந்தமையால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப் பட்டதாக கூறப்பட்டாலும், திருக்கு + ஓட்டியூர் = திருக்கோட்டியூர் எனப் பெயர்பெற்றதாகக் கூறுவது முன்னதைவிடப் பொருத்தமாகத் தெரிகிறது. திருக்கு என்றால் பாவம் என்றுப் பொருள். எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்று பொருள்படும்படி திருக்கோட்டியூர் என அழைக்கப்பட்டதைத் தெரிந்துகொண்டோம். அடுத்து, பிரகாரத்தில் ஒரு கிணறு காணப்படுகிறது, இந்தக் கிணற்றை "மகாமக கிணறு' என்று அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்வார்களாம்.
'ஓம் நமோ நாராயணாய' எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளதாம். இராமானுஜர், கோபுரம் மீது ஏறி நின்று உபதேசம் செய்த இடத்தைக்காண கோயிலுக்குள் உள்ள குறுகிய பாதை வழியாக கோபுரத்தின் மேல்தளம் சென்று நாமும் தரிசிக்கலாமா?
பெருமாளை வழிபட்டுவிட்டு வெளியே வரும் நமக்கு அப்போதுதான் நினைவுக்கு வருகிறார் நம்பி அவர்கள். அருகில் இருந்தவர்களிடம் நம்பி அவர்களின் வீடு எங்கேயென வினவ, பழைய காலத்து வீட்டைக் காட்டினார்கள். வீட்டுக்குமுன் சிறிது நேரம் நிற்கிறோம், நமது நினைவுகள் ஆயிரமாண்டுகள் பின்னோக்கி நகர்கின்றன. நம்பி அவர்கள் இங்கு நின்றுக்கொண்டு கோபுரத்தைப் பார்ப்பது போல தெரிகிறதே!
“திருக்கோஷ்டியூர் நம்பிகள் கல்திருமாளிகை” என்று எழுதியிருந்த பழைய காலத்து வீட்டுக்கு வெளியே நின்று,
'திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறோம்'
என்ற நமது குரலுக்கு பதிலாக பெண்மணியொருவர் வெளியே வந்து நம்மை வரவேற்கிறார்.
'என் பெயர் செண்பகம் எங்க வீட்டுக்காரர் நாராயணன், நாங்கள் நம்பியின் வம்சா வழியினர்'.
அறிமுகத்துடன் உள்ளே அழைத்துச் சென்றவர், வீட்டைச் சுற்றிக் காண்பிக்கிறார். கல்தூண்களுடன் சிறிய மண்டபம் போன்றிருந்த அவ்வீட்டின் ஓர் அறையில் நம்பி அவர்கள் வழிபட்ட படத்தை வைத்திருந்தனர். இன்றும் வழிபாட்டிலிருந்ததை நாமும் வணங்கிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வருகிறோம்...
சரி... யார் இந்த திருக்கோட்டியூர் நம்பி அவருக்கும் இராமானுஜருக்கும் என்ன தொடர்பு? எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெரியவரிடம் கேட்போமா?
திருக்கோட்டியூர் நம்பி பிறந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். திருவரங்கம் பெரிய நம்பியின் உபதேசத்தின்படி இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியைக் காண வருகிறார். சௌம்ய நாராயணப் பெருமாளை வணங்கிவிட்டு, நம்பியின் வீடு எங்கே என்று வினவி அவர் வீட்டையும் அடைகிறார். வீட்டிற்குள் இருந்தபடியே யார் எனக் கேட்க, நான் இராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி "நான் செத்து வா!" என்கிறார்.
திருவரங்கம் திரும்பிய இராமானுஜர், நம்பி அவர்கள் கூறியதன் பொருள் அறியாமல் மீண்டும், மீண்டும் அதேபோல் கூற அதே பதில் கிடைக்கிறது. இவ்வாறு தொடர்ந்து பலமுறை இராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைச் சொல்லி அத்தனை முறையும் நம்பி அவருக்கு உபதேசிக்க மறுத்துவிட்டார். கடைசியில், நான் செத்து வா என்றால் நான் என்ற அகந்தையை விட்டுவிட்டு வா என்று பொருளறிந்து, அடுத்தமுறை சென்றபோது இராமானுஜர் 'அடியேன் வந்திருக்கிறேன்' என்கிறார். உடனே, உள்ளே அழைத்த நம்பி இராமானுஜருக்கு "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை உபதேசிக்கிறார்.
“இந்த இரகசியம் தெரிந்தவன் வைகுந்தம் செல்வான். நான் இப்போது உனக்கு உபதேசிக்கிறேன். நீ யாருக்கும் உபதேசிக்க கூடாது மீறினால் நரகம் புகுவாய்!”
என்ற சத்தியம் வாங்கிக்கொண்டு இராமானுஜருக்கு அம்மந்திரத்தை உபதேசிக்கிறார். ஆச்சாரியரிடமிருந்து உபதேசத்தைப் பெற்ற இராமானுஜர் திருவரங்கத்துக்குப் புறப்பட்டார். புறப்படுமுன் திருக்கோட்டியூர் கோயிலின் கோபுரத்தின் மீது ஏறி கீழே இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு உரத்த குரலில் கூட்டத்தை நோக்கி,
“நீங்கள் இந்த உலகத்துத் துயரங்களிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுபட்டு மோட்சம் பெற விரும்பினால், நான் கூறும் இந்த மந்திரத்தை என்னுடன் சேர்ந்து மூன்று முறை உச்சரியுங்கள்!”
“ஓம் நமோ நாராயணாய”
என்று கூட்டதை பார்த்து மூன்று முறை சொல்ல, கூட்டமும் மொத்தமாக அந்த மந்திரத்தை உச்சரித்தது.இராமானுஜர் செய்ததை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி மிகுந்த கோபம் கொண்டவராக
“உனக்கு நரகம் கிட்டும் என்று தெரிந்தும் ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்க
“தங்கள் வாக்கை மீறினால் நரகம் கிட்டும் என்பதை நான் அறிவேன். நான் ஒருவன் நரகம் போனாலும், மற்றவர்களுக்கு உங்களுடைய உபதேசத்தால் மோட்சம் கிடைக்குமே”
என்று இராமானுஜர் பதில் கூற,
என்று இராமானுஜர் பதில் கூற,
இராமானுஜரின் இந்தப் பரந்த நோக்கத்தை எண்ணி “எம்பெருமானாரே!” என்று இராமானுஜரை அணைத்துக்கொண்டார் நம்பி. எம்பெருமானாரே என்றால் எனக்கே பெருமான் ஆனீர் என்று பொருள்.
நம்பி அவர்களின் வீட்டுமுற்றத்திலிருந்துப் பார்த்தால் கோயில் கோபுரத்தில் ஒரு இடத்தில் இராமானுஜரின் உருவச்சிலைத் தெரிகிறது. இங்கிருந்துதான் அவர் அந்த மந்திரத்தை மக்களுக்கு போதித்தாராம். அனைத்து மக்களும் உய்திருக்க வேண்டிய இராமானுஜரை மனத்தில் இருத்தி வீடு திரும்புவோமா...
(திருப்பத்தூர் - சிவகங்கை சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவிலும் திருக்கோட்டியூர் உள்ளது. அமைவிடம் 10°04′N 78°34′E)
- பாலா பாரதி












