திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி, தஞ்சாவூர் சாலையில், திருவெறும்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஜங்சன் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இங்குச் செல்கின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் தொடர்வண்டிகளும் திருவெறும்பூரில் நின்று செல்கின்றன. நகரப்பேருந்தில் செல்வோர் மலைக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)
தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தொல்லியல்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில், தமிழகத்தில் உள்ள, 275 பாடல் பெற்ற தலங்களில் 124 ஆவது தலமாக விளங்குகிறது. இத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும். கட்டி முடிக்கப்படாத அல்லது சிதிலமடைந்தக் கட்டுமானங்கள் கோயிலின் வடக்கேக் காணப்படுகின்றன.
இக்கோயிலில் சோழர், பாண்டியர், நாயக்கர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் திருவெறும்பியூர் எனவும், இறைவன் ஆதிசண்டேசுவரர் எனவும் குறிக்கப்பட்டுள்ளன. முதலாம் ஆதித்தன், இராசராசன், மூன்றாம் இராசராசன், முதல் இராசேந்திரன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், மாறவர்மன் சுந்தர பாண்டியன், விருப்பன உடையார் முதலியோர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சிவன் சன்னதியின் இடப்புறம் நவகிரகங்கள் சன்னதியும், வெளியே சௌந்தர நாயகி அம்மன் சன்னதியும் உள்ளன. நாங்கள் போயிருந்தபோது சிவனடியார்கள் தவமிருந்து சிறப்பு பூசைகள் செய்துக்கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பூசைப்பொருள்களுள் பாதரசத்தைக்கொண்டு கட்டப்பட்ட மூலிகைகளாலான ருத்திராட்சம் காணப்பட்டது.
இம்மலையில் எழுந்தருளியுள்ள ஈசனை திருநாவுக்கரசர்
"எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை..."
"விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!..."
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே !!..."
என்று மணமுருகி அழைக்கிறார்.
எறும்பியூர் ஈசனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
- பாலா பாரதி




No comments:
Post a Comment