பயணங்கள் முடிவதில்லை: பொற்பனைக்கோட்டை
...தொடர்ச்சி
...தொடர்ச்சி
பொற்பனைக்கோட்டை குளக்கரையில்தான் 2012 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் தங்கதுரை அவர்களால் முக்கோண வடிவிலான பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நடுகல் தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இக்கல் 2 அடி நீளமும் 2 அடி உயரமும் 10 செமீ பருமனும் கொண்டுள்ளது.
இக்கல்வெட்டைப் படித்த முனைவர் இராசவேலு அவர்கள் இதன் காலத்தைக் குறிக்கும்போது, எழுத்தமைதி அடிப்படையில் அரச்சலூர் கல்வெட்டுக்கு முற்பட்டது, புகலூர் கல்வெட்டுகளுக்குப் பிற்பட்டது எனவும் இதன் காலம் பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கூறுகிறார். மேலும் அவர் இக்கல்வெட்டைப் பின்வருமாறுப் படிக்கிறார்
இக்கல்வெட்டைப் படித்த முனைவர் இராசவேலு அவர்கள் இதன் காலத்தைக் குறிக்கும்போது, எழுத்தமைதி அடிப்படையில் அரச்சலூர் கல்வெட்டுக்கு முற்பட்டது, புகலூர் கல்வெட்டுகளுக்குப் பிற்பட்டது எனவும் இதன் காலம் பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கூறுகிறார். மேலும் அவர் இக்கல்வெட்டைப் பின்வருமாறுப் படிக்கிறார்
1. கோ வென்கட்டிற் நெதிர-
2. ணாறு பொன்கொங்கர் விண்ணக்கோன்
3. ஆ எறிஇத்து ஏவ அதவ்வனாரு
4. அங்கப்படைத் தாணையன் கணங்-
5. குமாரன்கல்
கோ வெண்கட்டி என்பவர் காலத்தில் பொன் கொங்கர் விண்ணக் கோன் என்பார் பசுக் கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்காவல் படைத்தலைவனும் கோட்டையின் காவலனுமாகிய கணங்குமரன் என்பவர் அவற்றை மீட்க நடந்த சண்டையில் இறந்துபட்டமைக்காக எடுக்கப்பட்ட கல்.
சங்க இலக்கியங்களில் வெட்சித்திணை, கரந்தைத்திணை ஆகிய திணைகள் நிரைகவர்தல், நீரை மீட்டல் போன்ற போர்முறைகளை கூறுகின்றன. இந்த இரண்டு போர்களிலும் வீரமரணம் அடைந்தவர்களைப் போற்றும் வகையில் நடுகற்கள் நடப்பட்டன. இதில் குறிப்பிடப்படும் வீரன் வெட்சிப்போரிலோ கரந்தைப்போரிலோ இறந்திருக்கவேண்டும் என்றுதெரிகிறது.
இந்தக் கல்வெட்டு "பொன்கொங்கர் விண்ணக்கோன்" என்ற சங்ககால அரசனின் ஆட்சியின்போது நடந்த சண்டையில் இறந்த கணங்குமரன் என்ற படைவீரனுக்காக எழுப்பப்பட்டது. இந்த விண்ணக்கோன் என்ற அரசன் கோ வெண்கட்டி என்ற அரசனுக்குப் பின்ஆண்டவன். அதனால் இந்த இரண்டு அரசர்களின் காலத்தை கணிப்பதற்கும் இக்கல்வெட்டு உதவியாய் அமைகிறது.
கோட்டைச் சுவருக்கு வெளியே சற்றுத் தொலைவிலுள்ள பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் பல குழிகள் காணப்படுகின்றன. இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டனவாம். இக்குழிகளுக்கு அருகாமையில் காணப்படும் குளத்திற்குப் ‘பனிநாளம்’ என்றும் பெயராம். நீராவிக்குளம், பனிநாளம் குளம் போன்ற பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துவதாக உள்ளது.
இக்குழி அமைப்புகள் அங்குள்ளவர்களால் செந்நாக்குழி என்று அழைக்கப்படுவதும் நோக்கத்தக்கது. சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின் நிறப்பண்பைக் குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச் சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன் மூலம் இதுசங்ககாலத்தை சேர்ந்த தொல்பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப் பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காணமுடிகிறது.
மேலும், திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரையுள்ள பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்தநிலையிலும் , இரும்புக் கழிவுகளைப் பிரித்தெடுக்க ப் பயன்படுத்தப்பட்ட கலன்களும் , இரும்பு வார்ப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்குக்குழாய்கள் . உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. பயணத்திற்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி கூறிவிட்டு வீடு திரும்பினோம்.
- பாலா பாரதி




No comments:
Post a Comment